www.asiriyar.net

Friday 22 September 2017

ஆசிரியர்களுக்கு கல்விப் பயிற்சிகள் அவசியம்

ஆசிரியர்களுக்குக் கல்விப் பயிற்சியளிப்பது அவசியமாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில் உள்ள 423 உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள், 43 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 32 முதன்மைக் கல்வி அலுவலர்கள் என மொத்தம் 498 அலுவலர்களுக்கு தலைமைப் பண்பு, கல்வித் திட்டமிடல் குறித்த இரண்டுநாள் பயிற்சி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. 

வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:மாறி வரும் சூழலுக்கேற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம். அக்கல்வி முறையை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அது குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.

பள்ளி அறிவியல் ஆய்வகங்களில் பணியாற்றுவதற்கு பிளஸ் 2 தகுதியே போதுமானது என்றாலும் பொறியியல், முதுநிலை, பட்டப்படிப்பு படித்தவர்களே அதிகம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொழில்நுட்பக் கற்பித்தலின் தரம் உயரும். ஆசிரியர்களுக்கு இருக்கும் இடர்பாடுகளைக் குறைக்கும் போது கல்வித்துறையில் அவர்களது பயணம் எளிதாகும். இதனைக் கருத்தில் கொண்டு இடமாறுதல் கேட்பவர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் அதற்கான நடவடிக்கைகள் 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.

முன்னதாக உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள்3 பேருக்கு வாகனங்களை அவர் வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம்,தொடக்கக் கல்வி இணை இயக்குநர் நாகராஜமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment