www.asiriyar.net

Sunday 5 November 2017

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அழைப்பு

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்று அரசாணை 303ஐ 11.10.2017ல் வெளியிட்டது. இதில் பகுதிநேர தொகுப்பூதிய திட்ட வேலையில் உள்ளவர்களுக்கும் 30% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இதில் பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பணிபுரியும் 16549 பகுதிநேர ஆசிரியர்களும் பயனடைகின்றனர். இதற்காக பகுதிநேர ஆசிரியர்களின் சார்பில் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜீன் 2ல் ஏழாவது ஊதிய மாற்று அலுவலர் குழு கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ் அவர்கள் கலந்துகொண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு அனைத்து வேலைநாட்களிலும் பணிவழங்கி குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18000 நிர்ணயித்து சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட கேட்டுக்கொண்டார். 

ஊதியக்குழுவும் அரசிடம் பரிந்துரைப்பாக உறுதியளித்தது. இருப்பினும் தற்போதைய 30% ஊதிய உயர்வால் ரூ.7700 தொகுப்பூதியத்தில் இருந்து ரூ.10600  பகுதிநேர ஆசிரியர்களின் புதிய தொகுப்பூதியமாக உயருகிறது. நிலுவைத்தொகையும் 01.01.2016 முதல் கிடைக்கும். 

இதனால் ஊதிய உயர்வுக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கடலூரில் 22.10.2017ல் அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை தலைவர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் (டேக்டோ) திரு.பா.ஆரோக்கியதாஸ் அவர்களின் தலைமையில் பகுதிநேர ஆசிரியர்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. 

24.10.2017 மற்றும் 25.10.2017ல் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை டேக்டோ ஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ் அவர்கள் முன்னிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் சந்திந்தபோது 30% ஊதிய உயர்வு பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெற்றுத்தர சம்மதித்தார். 

மேலும் பணிமாறுதல் விரும்புவோருக்கு பட்டியல் பெற்று தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் கூறினார். அதைப்போலவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்கள், இணை இயக்குநர் அவர்களையும் சந்தித்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் பெற்று வழங்க (டேக்டோ) ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தப்பட்டது.

 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க  2.11.2017ல் (டேக்டோ) ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்தபோது பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டது. 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகிய நான் மற்றும் திருவள்ளூர் ரமேஷ் அவர்களும், (டேக்டோ) ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது. பகுதிநேர ஆசிரியர்களின் நலன் காக்க அனைத்து வழிகளிலும் முன்னேறி செல்லும்போது வீணான சந்தேகங்களை எழுப்பி, குழப்பங்களை ஏற்படுத்தி, வாய்ப்புகளை வீணாக்க சில விஷமிகள் போராட்ட உணர்வை தூண்டுகிறார்கள். 

முறையிட்டு கேட்டு பெறக்கூடிய கோரிக்கைகளையும் போராடினால் மட்டுமே கிடைக்கும் என விஷம எண்ணத்தை பரப்பி வருகிறார்கள். எனவே போராட்டத்தால், கிடைக்க இருக்கின்ற பொன்னான வாய்ப்புகளை பகுதிநேர ஆசிரியர்கள் இனியும் இழந்திடக்கூடாது என்பதனை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன். 

எனவே அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் விழிப்புணர்வுடன் இருந்து நல்ல செயல்திட்டங்களோடும், செயல்பாடுகளோடும் தொடர்ந்து நல்வழியில் செல்லும் எனது வழியில் இணைந்து செயல்பட அழைக்கிறேன். 

கோரிக்கைகளை அரசிடம் கேட்க வேண்டிய முறையில் கேட்டு பெறுவோம். ஜாக்டோ ஜியா அமைப்புகூட இரண்டாக உடைந்து ஜாக்டோஜியா கிராப் அமைப்பு கோரிக்கைகளை வெல்ல அரசை ஆதரிக்கிறது. மேலும் CPSஐ ஒழிக்க CPS ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டு மாண்புமிகு தமிழக முதல்வரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கின்றனர். 

மிகப்பெரிய அமைப்பே கோரிக்கையை வெல்ல மாநாடு நடத்த திட்டமிடும்போது பகுதிநேர ஆசிரியர்களும் தொகுப்பூதிய வேலை ஒழிப்பு மாநாடு நடத்தி ஏன் கோரிக்கையை வெல்லக்கூடாது என்ற மாற்று சிந்தனையை வளர்க்க மீண்டும் மீண்டும் அழைக்கிறேன். 

ஊதிய உயர்வு, பணிமாறுதல், மே மாதம் ஊதியம் மற்றும் சிறப்பு காலமுறை என அனைத்தையும் பகுதிநேர ஆசிரியர்கள் பெற்று நல்ல நிலையை அடைய கோரிக்கைகளை முன்வைத்து பணி பாதுகாப்புடன், அமைதி வழியே - அறவழி என்னும் உன்னத வழியில் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து களப்பணி ஆற்ற மீண்டும் மீண்டும் அழைக்கிறேன்.

சி.செந்தில்குமார், செல் 9487257203. மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment