www.asiriyar.net

Tuesday 24 October 2017

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை

பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இப்புதிய கல்விக் கொள்கை, டிசம்பரில் வெளியிடப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சத்யபால் சிங் கூறியுள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர், திருவனந்தபுரத்தில் நேற்று, தேசிய கல்வியாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, அமைச்சர், சத்யபால் சிங் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பின், பெரும்பாலான கல்வியாளர்கள், துரதிருஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஆட்சி கால மனப்பான்மையை பிரதி பலிக்கும் வகையிலான கல்விக் கொள்கையை பின்பற்றினர்; இந்திய கலாசாரத்தை புறக்கணித்து, கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.

பிரிட்டிஷ் கால மனப்பான்மையிலிருந்து, கல்வியை விடுவிப்பது, அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது. கல்வித் துறையில், உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், நாம் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது.

அதற்கேற்ப, ஆரம்ப நிலையில், கல்வித் தரம் உயர்த்துதல், உயர் கல்வியை எளிதில் கிடைக்கச் செய்தல், அதிக மக்களுக்கு, கல்வி கிடைக்கச் செய்தல் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட வேண்டும்.

ஆலோசனை

மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, புதிய கல்வி முறையை உருவாக்கும் வகையில், பல கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தற்போது, இறுதிக்கட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பரில், நாட்டின் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும்.

சிறந்த கல்வி பெறுவதற்காக, நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில், சர்வதேச நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நிகரான கல்வி மையங்கள், இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவில், உயர் கல்வி கிடைக்கும் விகிதம், 25.6 சதவீதம். அமெரிக்காவில், இது, 86 சதவீதமாகவும், ஜெர்மனியில், 80 சதவீதமாகவும், சீனாவில், 60 சதவீதமாகவும் உள்ளது. எனவே, உயர் கல்வியை மேம்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பெற, அதிக செலவு செய்ய வேண்டிய நிலை, நம் நாட்டில் உள்ளது. இதை மாற்றி, அனைவருக்கும், சிறந்த உயர் கல்வி கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்.

பல்கலைகளில், 50 சதவீத ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. டில்லி பல்கலையில், 4,000 பணி இடங்கள் காலியாக உள்ளன. ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர், முனைவர் பட்டம்
பெறுகின்றனர்.

பெரியளவில் மாற்றங்கள்

இது, உலக பொருளாதாரத்துக்கு, 0.2 சதவீத பங்களிப்பை மட்டுமே அளிக்கிறது. நாடுமுழுவதும், ஆய்வுப் படிப்புகளில், பெரியளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கஸ்துாரி ரங்கன் தலைமையில் குழு

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை தயாரிப் பதற்காக, ஒன்பது பேர் அடங்கிய குழு, பிரபல விஞ்ஞானி, கஸ்துாரி ரங்கன் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை வரைவை உருவாக்கி, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு நிர்ணயிக்க ப்படவில்லை.

முதல் சுதந்திர போர் நடந்தது எங்கே?

ஒடிசாவைச் சேர்ந்த, பைகா விவசாயிகள் படையினர், 1817ல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நாட்டின் விடுதலைக்காக நிகழ்த்தப்பட்ட முதல் சுதந்திர போராட்டமாக அறிவிக்கப்பட உள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் நேற்று, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: ஒடிசாவில் ஆட்சி செய்து வந்த, கஜபதி மன்னர்களின் கீழ், பைகா விவசாயிகள் படை இருந்து வந்தது. இவர்கள், 1817ல், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போர்களை நடத்தினர். இந்த போர், பைகா புரட்சி என்ற பெயரில், வெள்ளையர்களுக்கு எதிரான, முதல் சுதந்திர போராக கருதப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை, நாடு முழுவதும், வரலாற்று புத்தககங்களில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment