www.asiriyar.net

Wednesday 27 September 2017

தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு அறிக்கையை ஊதியக்குழு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்கூட்டியே தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் 22.09.2017 அன்று ஜாக்டோ-ஜியோ வழக்கின் போது 30.09.2017 ல் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு நிதி நெருக்கடி காரணமாக  5 மாதங்கள் அமுல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என கேட்டது....


உயர்நீதிமன்றம் அதனை மறுத்து வரும் அக்டோபர் 13 ம் தேதிக்குள்  7 ஆவது ஊதியக்குழு தொடர்பான தனது இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் இதை தமிழக அரசு செய்யாவிட்டால் அக்டோபர் 23 ல் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை பிறப்பிக்கும்,  என  நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

 எனவே அரசு தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும் நாள் அல்லது அதற்கு மாற்றாக இடைக்கால நிவாரணம் 20% வழங்கும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் எனும் நிலையில் உள்ளது.

அதற்கு முன்னதாக அரசுக்கு ஊதியக்குழு தொடர்பான முடிவெடுக்க போதிய கால அவகாசம் அளிக்கும் விதமாக,குழு தனது அறிக்கையை 27.09.2017 அன்றே சமர்ப்பித்திருப்பது அரசு ஊழியர்,ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...

No comments:

Post a Comment