www.asiriyar.net

Sunday 25 February 2018

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். 


ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக்கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது.


இதற்கு பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இதற்கென தனியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. 

பள்ளிகளில் பிற வகுப்பெடுக்கும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பும் எடுத்தனர். கடந்த 2013ம் ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டனர். இதுபோல் மற்ற கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகள் வந்துவிட்டனர். 

ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் மட்டும் இல்லை.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி வகுப்பறையிலேயே, ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பாடங்களை கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது,’’ என்றார்.

No comments:

Post a Comment