www.asiriyar.net

Wednesday 31 January 2018

பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம்

தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசு பொதுத் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை, தாள் ஒன்றுக்கு தலா 7.50 ரூபாயில் இருந்து 10 ஆக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் எதிரொலியாக, 17.3.2016ல் ஊதியத்தை உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு மட்டும் 2003ம் ஆண்டு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்ட, பழைய தொகை நிர்ணயித்து, அரசாணையில் இடம் பெற்றது. இதன்படி தலா 10 ரூபாய் என்பதற்கு பதில், 3.50 ரூபாய் என தவறாக இடம் பெற்றது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. திருத்தப்பட்ட உத்தரவு வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் மாநில பொது செயலாளர் பிரபாகரன் கூறியதாவது:

கல்வி அதிகாரிகளால், 2016ம் ஆண்டு உத்தரவில் கவனக்குறைவாக 2003ம் ஆண்டு உத்தரவு விவரங்கள் இணைக்கப்பட்டது. இதை திருத்தி வெளியிட்டால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைவர். அதிகாரிகள் இதில் அக்கறை காட்டவில்லை. இதை கண்டித்து பிப்.,1 முதல் 13 வரை நடக்கும் பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்கும் திட்டம் உள்ளது. கல்வி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம், 
என்றார்.

No comments:

Post a Comment