www.asiriyar.net

Wednesday 25 October 2017

உயரும் மொபைல் நெட்வொர்க் கட்டணம்!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளதால், பிற நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தி வருவாய் ஈட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவையைத் தொடங்கினார்.

வாய்ஸ் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால் ஜியோவில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியதோடு, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் ஜியோவுக்கு மாறத் தொடங்கினர். இழந்த வாடிக்கையாளர்களை மீட்டெடுக்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் மேற்கூறிய நிறுவனங்கள் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன.

தொடக்கத்தில் இலவசச் சலுகைகளை வழங்கி வந்த ஜியோ, பின்னர் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கத் தொடங்கியது. இதற்குப் போட்டியாகப் பிற நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இதனால் அந்நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. கட்டணக் குறைப்பு குறித்து ஜியோமீது டிராய் அமைப்பிடம் குற்றஞ்சாட்டப்பட்ட பிறகு, அனைத்துச் சேவைகளுக்கும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிப்பது குறித்து டிராய் பரிசீலித்தது. 

இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது திட்டங்களுக்கான கட்டணத்தை 15 முதல் 20 சதவிகிதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ஜியோவின் 84 நாள்கள் வரம்பிலான ரூ.459 திட்டத்தில் அக்டோபர் 19 முதல் 15 சதவிகித கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு குறித்து சுவிட்சர்லாந்த்தைச் சேர்ந்த யு.பி.எஸ். நிறுவனம் தனது ஆய்வறிக்கையில், ‘ஜியோவுக்கு ஈடாகவும் அதனுடன் போட்டியிடும் வகையிலும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டுவந்த பிற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ தனது கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் பிற நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தலாம்’ என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment