www.asiriyar.net

Tuesday 10 July 2018

காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்திங்கள்கிழமை நடைபெற்றது.




 இந்தப் பயிற்சிக்கு தலைமை வகித்த அமைச்சர் செங்கோட்டையன் டிஜிட்டல் பிரிவு மதிப்பீடு, பணி இடம் -முகநூல் ஆகிய 2 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் இந்தியா முழுவதும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் அரசு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட்தேர்வு பயிற்சி தமிழகம் முழுவதும் 412 மையங்களில் ஜூலை 20-ஆம் தேதி முதல் நடைபெறும். விடுமுறை நாள்களில் 3 மணி நேரமும், பள்ளி நாள்களில் வகுப்பு முடிந்த பின்னர் 1 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும்.பள்ளிகளில் பாடத் திட்டத்தில் மட்டுமின்றி கியூ.ஆர்.குறியீடு வசதி உள்பட பல்வேறு புதிய விஷயங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, புதிய பாடத் திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதன்படி, ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பையடுத்து, அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்தில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்றார் அவர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாநில இயக்குநர் ஆர்.சுடலை கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

1 comment: