www.asiriyar.net

Wednesday 27 June 2018

அரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 264 பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெற புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஜூலை 9 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் 2018-19 -ஆம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கவும், அதற்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவும் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, 2018-19 -ஆம் கல்வியாண்டில் 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளை தொடங்கவும், இப்பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், அரசு கல்லூரிகளில் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tn.gov.in  என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment