www.asiriyar.net

Friday 2 March 2018

நாட் ரீச்சபிள்' ஆன கல்வி அதிகாரிகள் : பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் 'சோதனை'

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி.,
அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெரும் சிரமம் ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர், தலைமையாசிரியர் வரை எளிதிலும், செலவின்றியும் தொடர்புகொள்ள ஏர்செல் அலைபேசியில் சி.யு.ஜி., இணைப்பில் உள்ளனர்.அதிகாரிகள், தலைமையாசிரியர் 'வாட்ஸ்ஆப் குரூப்'கள் ஏற்படுத்தி தகவல்கள், அறிவுறுத்தல், கல்வி செய்தியை பரிமாற்றம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சில நாட்களாகவே ஏர்செல் அலைபேசி சேவையில் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், "நேற்று முதல் (மார்ச் 1) ஏர்செல் அலைபேசி செயல்படாது," என அதன் தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் அறிவித்தார். இந்நிலையில் சென்னை, மதுரை உட்பட பல இடங்களில் அலைபேசி சேவை செயலிழந்தது. இதனால் அதிகாரிகளால் தேர்வு மையப் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமையாசியர்கள், அலுவலர்களை எளிதில் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:சேவை பாதிப்பால் தேர்வு துவங்கிய முதல் நாளில், பெரும் சிரமம் ஏற்பட்டது. மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பிய பின் அது சேர்ந்ததா, இல்லையா, தேர்வு துவங்கியதா, ஆப்சென்ட் மாணவர் விவரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.பறக்கும் படை மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் பலரின் அலைபேசி 'நாட் ரீச்சபிள்...' ஆகியது. சிலரிடம் மட்டும் அவர்களின் மற்றொரு அலைபேசிஎண்ணை பெற்று தகவல்கள் பெறப்பட்டது. தேர்வுக்கு முன்பே இதுகுறித்து எச்சரிக்கப்பட்டது.

இருப்பினும்,சில இடங்களில் நெட்வொர்க் கிடைத்து இணைப்பு இருந்ததால், அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாளில் இந்த சிரமம் ஏற்பட்ட பின் தேர்வு பணியில் ஈடுபடும் முக்கிய அதிகாரிகள், மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் மற்றொரு அலைபேசி எண்களை கேட்டு பெற்றுள்ளோம், என்றனர்.

No comments:

Post a Comment