www.asiriyar.net

Thursday 22 February 2018

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ட்ரம்ப்

பள்ளிகளில் ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத்தவிர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்கள் மீது வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அமெரிக்க அதிபருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். முதல் கட்டமாக ஒரு நிமிடத்துக்குள் நூற்றுக்கணக்கான குண்டுகளைப் பாய்ச்சும் வகையில் துப்பாக்கிகளின் வேகத்தை அதிகரிக்கும் 'பம்ப் ஸ்டாக்' எனப்படும் கருவியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.இந்நிலையில் மற்றொரு முடிவாக ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறையும் என்றும், இந்தத் திட்டம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும்நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணியும், அவர்களது மன நிலையம் ஆராயப்படும் என்று வெள்ளை மாளிகையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

No comments:

Post a Comment