www.asiriyar.net

Sunday 18 February 2018

ரயில்களில் குழுவாகச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு!

திருமணம், சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மிகச்சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில்களில் குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்கள், இனிமேல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ரயில்களில் திருமணம், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்ல ரயில் பெட்டியை ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்காக குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டியை ரயில்வே நிர்வாகம் இணைக்கும். அதேபோல், சில அமைப்புகளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தனியாகச் சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.

ரயில்பெட்டி அல்லது தனி சிறப்பு ரயிலில் செல்ல விரும்புவோர், ரயில்வே கண்காணிப்பாளர் அல்லது நிலைய அதிகாரியை நேரில் சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும். பின்னர் அதற்கான முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ரயில்வே நிர்வாகம் பரிசீலனையை ஏற்று ரயில் பெட்டியை ஒதுக்கீடு செய்யும். தற்போது இந்த நடைமுறைப்படி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை முன்பதிவு செய்துவருகின்றனர். 

ஆனால் இதற்குக் கால தாமதம் ஏற்படுகிறது; அலைச்சல் அதிகரிக்கிறது.எனவே ரயில் பெட்டி அல்லது சிறப்பு ரயில் விடுவதற்கு,ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ரயி்ல்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இனி குழுவாகச் செல்ல விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயிலில் ஒரு தனி பெட்டியை முன்பதிவு செய்வதற்குப் பாதுகாப்புத் தொகையாக 50,000 ரூபாயை ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதே போல் சிறப்பு ரயில்களுக்கு 18 பெட்டிகளுக்கான தொகையைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment