www.asiriyar.net

Thursday 22 February 2018

தமிழகத்தில் 30.46 லட்சம் பேர் வேலையில்லா பட்டதாரிகள்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் நிலோபர் கபில் கூறினார். 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.


தமிழக தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் நிலோபர் கபில் இந்த முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது :தமிழகத்தில் 85 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 20 லட்சத்து 9 ஆயிரத்து 337 பேர். 

இவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறவர்கள். 23 வயதுக்குட்பட்டவர்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேர். 24 வயதில் இருந்து 35 வயதுக்குள் உள்ள பதிவுதாரர்கள் தான் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள். அவர்கள் 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் தான். 

எனவே எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கிறார்கள். குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 23 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.வேலை வாய்ப்பு பதிவை, தமிழக அரசு எளிதாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த முகாமில் 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பணியாளர்களை தேர்வு செய்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டனர். பெரும்பாலானவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment