www.asiriyar.net

Sunday 22 October 2017

காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும் பாதிப்படைந்துள்ளன. 

தமிழகத்தில் சுமார் 8,395 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அரசுப்பள்ளிகளை போன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியிடங்கள் உள்ளன.

கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு இப்பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் இப்பணியிடங்கள் காலியாகவே உள்ளன. சில பள்ளிகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். 

தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசு சார்பில் 13 வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அலுவலர்கள் இல்லாததால், ஆசிரியர்களே இலவச பாடப்புத்தகம், புத்தகப்பை, வரைபடம், செருப்புக்கான கால் அளவு எடுப்பது, தினந்தோறும் செய்யவேண்டிய அலுவலகப்பணிகள் உள்ளிட்டவைகளை செய்ய வேண்டியுள்ளது. 

இப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடிவதில்லை. பொதுத்தேர்வு நடக்கும் காலங்களில் தலைமையாசிரியருடன் சென்று வேறு பள்ளிகளில் தேர்வுப்பணி செய்ய வேண்டியுள்ளது. 

இதனால் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘நலத்திட்டம் வழங்கவும், அலுவலகப்பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே அரசு பள்ளிகளைப்போல், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment