www.asiriyar.net

Monday 23 October 2017

போராட்டமா; சமரசமா? ஜாக்டோ - ஜியோ இன்று முடிவு

தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே, அரசுடன் சமரசம் செய்து கொள்வதா; மீண்டும் போராட்டத்தை தொடருவதா என, முடி வெடுக்கப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

அதிருப்தி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ,செப்டம்பர் மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியது. உயர்நீதிமன்றம் தலையிட்டு, போராட்டத்தை நிறுத்தியது. ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, ௨௦௧௬, ஜன., முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடையாது என, தமிழக நிதித்துறை அறிவித்தது. அதனால், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முரண்பாடு : ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என, பல சங்கங்களும், முதல்வரிடம், மனு அளித்துள்ளன. ஜாக்டோ - ஜியோ அமைப்பின், அவசர கூட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில், நிலுவை தொகையை தர மறுப்பது மற்றும் ஆறாவது ஊதியக்குழு முதல் தொடரும் ஊதிய முரண்பாடுகள் தொடர்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ முறையிட உள்ளது.'இந்த வழக்கில், அரசு, என்ன விளக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்; நிலுவைத் தொகை தர மறுத்தால், மீண்டும் போராட்டம் என்ற நிலையை எடுக்க வேண்டி வரும்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment