www.asiriyar.net

Tuesday 29 August 2017

'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை

'லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

'விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா வலியுறுத்தி வருகிறார். 9,231 விபத்துக்கள்: வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன; அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர்.

90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன. இதைக் குறைக்க, ஏற்கனவே உள்ள மோட்டார் வாகன சட்டங்களின் படி, வாகன விற்பனையாளர்கள், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாதோருக்கு, வாகனங்களை விற்கக்கூடாது. அனுமதிக்கக் கூடாது அவ்வாறு விற்றால், விற்பவர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன், வாகன உரிமையாளர், வாகனத்தை இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும், எல்.எல்.ஆர்., எனப்படும், 'பழகுனர் லைசென்ஸ்' வைத்திருப்போர், அந்த உரிமத்தில் உள்ள வாகனத்தை மட்டுமே, இயக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை கண்டிப்பாக அனைத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment